Saturday, November 3, 2012

கறுப்புக்கல்



தியாக ஆடைகளில்
அந்தரங்கங்களாப் பேசிய நீ

வெள்ளாடைகளோடு 
விருந்திளராய் அழைத்து
ஹாஜிகளை குழந்தையாய் 
பார்த்த கஃபாவுக்குள்

உன் அச்சரத்துக்குள்
தியாக மை ஊற்றிக் கிடக்கிறது

தூரத்து முஸ்லீம் எல்லாம்
திரண்டு வந்து என்று சேர்ந்து
கறுப்பன் வெள்ளையன் என
பாகுபாடு ஏதுமிலா
கவலையுடன் கல்புருகி
கையேந்த தியாக உணர்வை
நெஞ்சுருக நினைத்துப் பார்க்க
வந்த ஹஜ்ஜே


படைத்தவனை நம்பி 
பாலைவனத்தினிலே
தாய் மகவை வைத்து விட்டுச்
சென்ற தோர் தியாகம் 
தாகம் தீர்க்க தண்ணீர் தேடிய
அன்னை ஹாஜராவின்
பாதங்களைப் பஞ்சாக்கினாய்

கறுப்புக் கல்லாய் நின்று
இப்றாஹிம் நபியின் 
உள்ளத்திற்கு கபனிட்ட வேளை
தியாகமே நீ எழுந்து நின்றாய்.

இஸ்மாயீலைக் குழந்தையாக்கி
இப்றாஹீம் எண்ணத்தை சோதித்தாய்

எல்லைகளைக் கடந்து
இறுகப் பிணைப்புடன்
ஏழை பணக்காரன் என்ற 
பாகுபாடு ஏதுமில்லா
ஆசைகளைத் துறந்து
இரக்கத்தை வலியுறுத்தி
கட்டளைகளை நிறைவேற்ற 
கற்றுத் தந்த பாடம்.

உலக மையத்தில் 
அடிக்கப்பட்ட ஆண்யே
அறபா மைதானத்தில்
எந்தப் பாதமும்
வெந்ததாய் சரித்திரம் இல்லை.
ஒரு வரி கூட 
யாரும் எழுதவும் இல்லை.

உன்னில் வேகப்பந்து 
அருள் மாரி சொரிய முன்
எங்கள் கண்களும்
தெரு மாரி பொழிந்து
அடங்கவில்லை.

அண்ணலாரின் கால்கள்
ஆர்த்தரித்த  பூமியே
உனது ஒவ்வொரு மண்ணும்
தியாகத் துகள்கள் தான்.


                           மூதூர்    சுஹைதா ஏ கரீம் 
வெள்ளவத்தை.






அன்றைய மழைநாள் ......
இன்றைய நினைவலையில்
****************************************.


இரவு முழுவதும்
சோவென பெய்த மழை 
இன்னும் விட்டபாடில்லை..

முன் வீட்டுக் கூரை 
எங்கள் வீட்டு முற்றத்தில்

அப்பா ஆசையாக வளர்த்த
மரங்கள் அடித்த காற்றுக்கு
தாக்கு பிடிக்காமல்
அடியோடு சாய

அதை இழுத்துக் கட்டும் முயற்சியில்
கொட்டும் மழையையும் 
பொருட் படுத்தா 
போராடும் அப்பா...


ஒழுகும் இடங்களுக்கு 
பார்த்துப் பார்த்து 
பாத்திரம் வைத்து 
அலுத்துப் போன அம்மா


படலையில் யாரோ தட்ட
கூரையில் செருகி இருந்த
குடையை மெல்ல திறக்க
குடித்தனம் நடத்தி  இருந்த 
கரப்பான் பூச்சிகள் ...
பாவம்.


மெல்லத் தட்டி
உடைந்த கமபியை
அவசரமாய் சரி செய்ய
முயர்ச்சிக்கும் 
அண்ணா


அடுப்பங்கரையில்
ஊறிக் கிடந்த விறகை
தன்னால் இயன்ற மட்டும்
ஊதித் தள்ளி
மரவெள்ளிக் கிழங் கவித்து
தேங்காய் சம்பலுடன்
ஆவி பறக்க அவித் தெடுத்து
குழந்தைகளின் பசி யாற்றிய
அம்மாவின் பொறுமை.

புத்தக ராக்கையில்...
அடுக்கி வைக்கப்பட்ட
அப்பா எழுதிய 
கதைத் தாள்கள் எல்லாம்
தம்பிக்கு கப்பல் 
செய்து விளையாடும்
மூலப் பொருளாகியது.


வெளியில் நனைவதும் 
கூரைத் தண்ணீரில் 
கூக்குர லிட்டு குளிப்பதும்
அம்மாவிடம் அடி படுவதும்
இந்த சுகம் 
இன்ப சுகம் 
இன்னும் இனிக்கிறது.


முற்றத்தில் நின்ற 
முருங்கை மரம்
பூவும் காயுமாக 
முறிந்து விழுகிறது.


முற்றியும் பழுத்தும்
பளபளப்பாக  காட்சி தந்த
பப்பாசி மரம் 
அடிக்கும் காற்றுக்கு 
முகம் கொடுக்க முடியாமல்
முறிந்து விழுந்ததில்
முகம் சுளித்த அம்மா
இயற்கையை ஒரு நிமிடம்
நொந்து கொண்டாள்.


செருகிய முந்தானை யெடுத்து
முகத்தை துடைத்த படி 
விட்ட பெருமூச்சு
இன்னும் காதில் கேட்கிறது.


ஒழுகும் இடங்களில்
வைத்த பாத்திரங்கள் 
பத்திரமாக 
சத்த நாத மிசைத்து
ஒவ்வொரு வித சந்தமாக
இயற்கையின் இன்பத்தில்
நனைந்தது.

கிழிந்த ஓலைப்பாயில்
சுருண்டு படுக்கும் பாட்டியை
தாத்தாவின் வேட்டி
போர்த்திக் கொள்கிறது


தாத்தாவின் பிரிவின்பின்
பாட்டியின் ஆதரவு எல்லாம்
தாத்தாவின் வேட்டிதான்
அரவணைப்பாக..
தன்னை மறந்து தூங்கும்
பாட்டி..

இன்னும் எத்தனையோ
மழைக்கால நினைவுகள் 


இன்று

வசதியாக சாய்வு நாற்காலியில்
கால்களை மடித்து 
போர்வைக்குள்
 சுருட்டிக் கொள்கிறேன்.
நெஞ்சின் மேல் 
முகம் புதைத்து கிடக்கும்
பேரனைச் சுமந்தபடி
சோ  வென பெய்யும் மழையை
 ரசித்துக் கொண்டிருக்கிறேன்..

அறுபத்தி நான்காம் ஆண்டு
அடித்த புயல் போல் வருமோ
ஆதங்கப் படும் அம்மாவை
அனுதபமாக பார்க்கிறேன்.




இந்த  கவிதையை  1,11,2012, இன்று
லண்டன் வானொலி  வியாழன்
கவிதை நேரத்தில் வாசித்தேன்.
திருமதி சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை..

..

Tuesday, July 24, 2012

ஆணின் அவஸ்தை.

எப்போது புரிவார்கள் ,
எப்படிப் புரிய வைப்பது..
அப்படி இப்படி என்று
சொற்படி நடப்பதை
எப்படிச் சொல்வது.

     தாய்க்குத் தலைமகனாய்
     தலைக்கு மேல் சுமை.
     முடியாது என்றிருந்தால்
     முதற் கோணல் ....
      முற்றும் கோணலாய் ...
     மூத்தவனைத் திட்டுவது.
     நீ......ஒழுங்காய்
     இருந்திருக்கலாம்...

அப்படி என்றால் .....
பெற்றோர்கள் எதர்க்கு.

     தங்கைகளைக் கரைசேர்க்க
     தலைக்கு மேல் விலை பேசி
     தாரவார்த்து விடுவது போல்
     தாரத்தைத் தேடித் திரிகிறார்கள் .
     தரம் ஒன்றும் இல்லை என்றாலும்
     வரம் வந்து முன்னிற்கும்.
     கரம் கை கொடுக்கும்.

பின்னாளின் பிரச்சனைகள்
பிள்ளை ஒன்று வருமுன்னே
தாயைப் பார்ப்பதா .....
தாரத்தைப் பார்ப்பதா....
மாறி மாறி குறைகள்
வந்து குவியும் .
குந்தி இருக்க மனமில்லா
குடும்பத்தை நிந்திக்கச் செய்யும்.

      அன்னைக்குப் பணிவிடை
      அத்தைக்குப் பிடிக்காது
      தாரத்திற்கும் தங்கைக்கும்
      தரம் தாழ்த்தா பிரச்சனை.
      தலை குணிந்தாலும் துன்பம்
      தலை நமிர்ந்தாலும்
      அர்த்தம் பல சொல்லும்....

பெண்களுக்கு மட்டுமல்ல
ஆண்களுக்கும் அவஸ்தைதான் .
புரிந்துணர்வு இருந்துவிட்டால்
புகுந்த வீட்டில் நிம்மதி கிடைக்கும்.

                                                                             சுஹைதா ஏ கரீம்
                                                                                      வெள்ளவத்தை.
     



Friday, July 20, 2012

குட்டிக் கவிதைகள்.......





ரேசன் கடைக்காரனுக்கு
குழந்தை பிறந்தது
நிறை குறைவாக.

          ( படித்த கவிதை.)



முதுமை
-------------
                   எழுத ஆசை இருக்கு
              பேனாவில்
மை இல்லை.


         இளமை
        ------------
     பேனாவில் மை இருக்கு
       எழுத ஆசை இல்லை.

      கண்ணாடி
----------------
   முதிர்க் கன்னியின்
        முக்கய காதலன்.

          பத்திரிகை
         ----------------
சிரிக்கவும்
    சிந்திக்கவும்
      அதிர்ச்சியடையவும்
      அவமானப் படுத்தவும்
வெள்ளைக் காகிதத்தின் 
    மகரந்தச் சேரக்கை.


     கவிதை
    -------------
    கவிதை சொல்லச் சொன்னான் 
          நான் 
                அவன் பெயரை உச்சரித்தேன்..

எனது கவிதையின் 
முதல் வரி நீதான் 
     மொத்தக் கவியும்
             ஒரே வரிதான்.

    கடைத்தெரு.
       -------------------
அன்று கடைத்தெரு
        இன்று காடைத் தெரு.

பூ  
---
     பள்ளி அறையில்
    கசக்கப் படுவதாலா
         உன்னை பெண்ணுக்கு 
       ஒப்பிடுகிறார்கள்.

                                சுஹைதா ஏ கரீம்.
       


அழகான நாட்கள்...

இன்னும் என் 
  இதயத்தை
இன்பமாக்கி
  ஈரப்படுத்துகிறது
எனது பாட்டி 
வாழ்ந்த வீடு.

வியர்வைத் துளிகளால்
கழிமண் குழைத்து 
கடுமையான உழைப்பால் 
உயரவைத்த கோபுரம்.
ஒவ்வொரு சுவரும் 
வெவ்வேறு கதை கூறும்
கண்கள் கலங்கினாலும் 
உள்ளம் குளிர்ந்து போகும்


எத்தனை இன்பங்கள்
உறவுகளுக்குள் 
அன்புப் பரிமாற்றங்கள்
முற்றத்தில் இருந்து
முழு நிலவை ரசித்தபடி
பாய் விரித்தமர்ந்து
தாத்தா பாட்டி கதைகேட்டு
பாட்டுப் பாடி 
பள்ளாங்குழி  விளையாடி
நிலாச் சோறூட்டி 
உண்டு மகழ்ந்த நாட்கள்

பாதிச் சுவர் வைத்து
பார்த்துப் பார்த்து கட்டியது
வரிசையாய் கம்படுக்கி
கழிமண் குழைத்தழுத்தி
கட்சிதமாய்ச் செய்த மாளிகை
ஓலைக் கூரைக்கிடையே 
ஒளியடிக்கும் 
ஆங்காங்கே
பகலிலும் இரவிலும்
வெசாக் பண்டிகை போல
சூரியனும் சந்திரனும்


'மாலை நிலா 
ஏழை என்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா?'.

பார்துப் பார்த்து
பகலிரவாய் கண்விழித்து
படுத்துறங்க மெத்தை கட்டி
பாய் விரித்தமர 
 படியும் வைத்து
பக்குவமாய் சமைத்த குடில்

பனை ஓலை வேலியும்
படுத்துறங்கும் படிக்கட்டும்
மாளிகையில் கிடைக்காத
மனநிம்மதியும்
மனதை விட்டு அகல வில்லை
கண்ணுக்குள் மாளிகையாய்
கனவில் வந்து போகிறது.

                                            சுஹைதா ஏ கரீம்.
                                         வெள்ளவத்தை.









Wednesday, June 13, 2012

எதுவும் பேசாதே

எதுவும் பேசாதே
*****************



நீ நினைத்ததை முடிக்க
தீர்மாணித்து விட்டாய்
கொஞ்சம் கூட
 யோசிக்காமல்
உன் எண்ணம் 
உன் கால் 


பயனிப்பவன் நீ என்பதாலா
எதுவும் கேட்க வில்லை
சொல்லி விட்டேன்
இனியும் என்னிடம்
எதுவும் பேசாதே

உன் கனவு 
உன் வாழ்க்கை 
உணர்ந்து செயல் படு 
எனைச் சாராதே

உன் வருமானம் 
உன் அகிம்சா வாதம்
எதையும் என்னிடம்
விமர்சிக்காதே

உன் கூற்று உனக்கு 
சரி என்றால்
ஒன்றுக்கு பலதடவை
சிந்தித்து இருக்கலாம்

உனக்கு தெரியும்
 எத்தனை முறை
புத்தி புகட்டி இருப்பேன்
முன்னேற வழி காட்டியிருந்தேன்

எனை உதாசீனம் செய்து
எதில் முன்னேற்றம் 
கண்டாய் சொல்
எதையும் கேட்காமல்

இனியும் எதுவும் பேசாதே
என்றாவது ஒருநாள் 
எனை உணர்வாய் 
அன்று 
நானிருந்தால்.....

மீண்டும் வருவாய் 
என்னிடம்
ஆறுதலாய் வா 
ஆலோசனை தருகின்றேன்

இனியும் என்னிடம் 
எதுவும் வேசாதே
ஒன்றைப் புரிந்து கொள்
நீ 
முதிர்ந்த அறிவு செறிந்தவனாய் 
இருந்தபோதும்
ஆலோசனையில் 
அலட்சியம் வேண்டாம்

மூதூர் சுஹைதா ஏ கரீம் 
வெள்ளவத்தை






Tuesday, June 12, 2012

கனவு





இன்றும் பாதித்தூக்கத்தில்
துயில் எழும்புகிறேன்
அன்று பறிக்கப்பட்ட
எங்கள் உடமைகளும்
உணர்வுகளும் 
இன்றும் பாம்புகளாகி
கணவில் கூட 
கொத்துகிறது.

மூதூர் சுஹைதா ஏ கரீம் 
வெள்ளவத்தை.